எதிர்மறை மதிப்பெண் முறையை முழுமையாக அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு Negative Mark போட்டித் தேர்வுகளில் பின்பற்றப்படும் எதிர்மறை மதிப்பெண் வழங்கும் முறையை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நெல்சன் பிரபாகர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர்வதற்காக ஐஐடி ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதினேன்.
இதில் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் கட் ஆப் 50-க்கு 47 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். ஆனால் என்னை ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்கவில்லை.
எனவே எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யக்கோரி சிபிஎஸ்இ-க்கு கோரிக்கை விடுத்தேன். ஆனால் அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு என்னை அனுமதிக்க உத்தரவிட்டும்,
அதிகாரிகள் என்னைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக வேறு வழியின்றி தனியார் கல்லூரியில் சேர்ந்து எனது பி.இ படிப்பை நிறைவு செய்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஏ.அருள்மொழியும், சிபிஎஸ்இ சார்பில் வழக்குரைஞர் ஜி.நாகராஜனும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், எதிர்மறை மதிப்பெண்கள் லட்சக்கணக்கான மாணவர்களின் கற்பனைத் திறனை மழுங்கடித்து எதிர்காலத்தையே சீரழிக்கும் முறையாக உள்ளது.
கொள்குறிவகைத் தேர்வுகளில் 4 விடைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து பதிலளிக்க வேண்டும்.
ஆனால் எதிர்மறை மதிப்பெண் முறையின் காரணமாக மாணவர்களிடம் சிந்தித்து பதிலளிக்க வேண்டும் என்ற சிந்தனையே வராது.
இந்த தேர்வுகள் எந்த பதில் சரியானதாக இருக்கும் என்ற பதற்றத்தையும், பயத்தையுமே ஏற்படுத்தும்.
இந்த வழக்கின் விசாரணயின் போது, கல்வியில் வளர்ந்து முன்னேறிய நாடுகளில் கூட இந்த எதிர்மறை மதிப்பெண் முறை கிடையாது. வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியிலும் இந்த முறை பின்பற்றப்படுவதில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தேர்வு வாரியம், ஒரு மாணவர் கேட்கப்படும் கேள்விகளுக்கு அனைத்து பதில்களையும் துல்லியமாக கணித்து விடையளிக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது.
எதிர்மறை மதிப்பெண்களால் அறிவில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து விட்டோம் என்பதற்கான எந்தவிதமான அறிவியல் பூர்வமான ஆதாரமும் கிடையாது.
இந்த வழக்கைப் பொருத்தவரை, மனுதாரர் சரியாக பதிலளித்த 18 கேள்விகளுக்கு 4 மதிப்பெண் வீதம் 72 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
அவர் தவறாகப் பதிலளித்த 25 கேள்விகளுக்கு தலா ஒரு மதிப்பெண் வீதம் 25 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டுள்ளது. இறுதியாக அவர் பெற்ற 72 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டு 47 மதிப்பெண் பெற்றுள்ளதாகக் கூறி அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐஐடியில் சேர வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறவில்லை.
மனுதாரரைப் போலவே பல மாணவர்களின் எதிர்காலமும் இந்த எதிர்மறை மதிப்பெண்களால் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது.
எனவே போட்டித் தேர்வுகளில் பின்பற்றப்படும் எதிர்மறை மதிப்பெண் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
No comments:
Post a Comment