பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி விண்ணப்பங்களை செலுத்தியுள்ளனர்.
பெங்களூரு பல்கலைக்கழகம் மூன்றாக பிரிக்கப்பட்டு புதிதாக உருவான பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் பிஎச்டி பட்டப்படிப்புக்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது.
இதையடுத்து, பல்வேறு துறைகளில் இருப்பிருக்கும் 139 பிஎச்டி இடங்களுக்கு 1,114 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூரு பல்கலைக்கழகம் ஆய்வுப் பட்டப் படிப்பான பிஎச்டிக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளாததால் தான், பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பங்களை செலுத்தியுள்ளனர் என பல்கலைக்கழக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2013-ஆம் ஆண்டு தாம் அறிவித்திருந்த வழிகாட்டுதலின்படி ஆய்வு பட்டப்படிப்புக்கு (பிஎச்டி) பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றிருப்பதற்கு பெங்களூரு பல்கலைக்கழகம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. ஆய்வு பட்டப் படிப்புக்கு 2016-ஆம் ஆண்டு புதிய வழிகாட்டுதலை ஆளுநர் வெளியிட்டுள்ள நிலையில், 2013-ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதலின்படி பிஎச்டி பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருப்பது சட்டவிரோதமானது என பெங்களூரு பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகப் பதிவாளர் ஜி.சிவராஜு கூறுகையில், பிஎச்டி பட்டப்படிப்புக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலுக்கு 2016-ஆம் ஆண்டு ஆளுநர் ஒப்புதல் அளித்து, அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வழிகாட்டுதல்படிதான் பிஎச்டி பட்டப்படிப்புக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் 2013-ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதல்படி பிஎச்டி பட்டப்படிப்புக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இது எந்தளவுக்கு சரி என்பது சந்தேகமாக உள்ளது என்றார் அவர். இதை முழுமையாக மறுக்கும் பெங்களூரு மத்திய பல்கலைக்கழகப் பதிவாளர் ராமசந்திர கெளடா, 2013-ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதல் தான் நடைமுறையில் உள்ளது. எனவே, அதன்படி பிஎச்டி சேர்க்கையை தொடங்கியிருக்கிறோம் என்றார் அவர்.
கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
No comments:
Post a Comment